Sunday, February 12, 2023

ஞானத்தேடல் - Ep 74 - காலக்கணக்கு - (Gnanathedal)


 காலக்கணக்கு

2 கண்ணிமை கொண்டது - கைந்நொடி 

 2 கைந்நொடி கொண்டது - மாத்திரை

 2 மாத்திரை கொண்டது - குரு 

 2 குரு கொண்டது - உயிர் 

 9 உயிர் கொண்டது - க்ஷணிகம் 

12 க்ஷணிகம் கொண்டது - விநாடி 

60 விநாடி கொண்டது - நாழிகை

 7.5 நாழிகை கொண்டது - சாமம்

 4 சாமம் கொண்டது - பொழுது 

 2 பொழுது கொண்டது - நாள்

30 நாள் கொண்டது - மாதம்

12 மாதம் கொண்டது - வருஷம். 


யுகங்கட்கு ஆண்டு அறிதல்


இருநூற் றொருபதுடன் ஆறா யிரத்தை 

இருநால் இருமூன்றின் நாலில் - நிருமித்த 

பின்னிரண்டு தன்னில் பெருக்கில் திருமாதே 

நண்ணுமொரு நாலுகத்தின் சீர்


உரை: அழகிய திருமகளுக்கு ஒப்பானவளே! கிரேதாயுகம், திரேதாயுகம். துவாபரயுகம், கலியுகம் என்னும் நான்கு யுகங்களுக்கும் ஆண்டுகள் எவ்வளவு எனின். இருநூற்றுப் பதினாறாயிரத்தை (உாகயசுசூ) எட்டிலும் ஆறிலும் நாலிலும் இரண்டிலும் பெருக்க, எட்டில் பெருக்கிய பதினேழு லட்சத்து இருபத்தெண்ணாயிரம் கிரேதாயுகத்து ஆண்டு எனவும். ஆறில் பெருக்க, பன்னிரண்டு இலட்சத்துத் தொண்ணூற்று ஆறாயிரம் திரோதாயுகத்து ஆண்டு எனவும். நான்கில் பெருக்க எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம் துவாபரயுகத்து ஆண்டு எனவும். இரண்டில் பெருக்க நான்கு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் கலியுக ஆண்டு எனவும். இந்த நான்கு யுகமுங்கூடிய ஆண்டு நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்: இஃதொரு சதுர்யுகம் என்று சொல்லப்படும்.

தேவகாலம் அறிதல்


எண்ணுஞ் சதுர்யுகமீ ராயிரங் கூடில் 

நண்ணுஞ் சதுர்முகத்தோன் நாளாகும் பெண்ணணங்கே

ஐயாறு திங்களே ஆறிரண்டும் ஆனதே 

பொய்யாத நூறும் புகும்.


உரை : திருமகளுக்கு ஒப்பானவளே! மேற்கூறியவாறு நான்குயுகம் இரண்டாயிரம் கொண்டது நான்முகனுக்குப் பேராயுள். இந்தப் பேராயில் நூறு (m) சென்றால் ஆதிநான்முகனுக்கு யுகம் முடிவு.

நான்கு யுகமுங் கூடின ஆண்டு நாற்பத்துமூன்று இலட்சத்து இருபதாயிரம் இது மகாயுகம் என்று சொல்லப்படும். இந்த மகாயுகம் பதினெட்டுச் சென்றால் ஒரு மனுவுக்கு அரசாட்சி: இந்த மனுவுக்கு அரசாட்சி எழுபத்து நான்கு சென்றால் இந்திரனுக்கு அரசாட்சி. இந்திரனுக்கு இந்த அரசாட்சி இருநூற்று எழுபது சென்றால் நான்முகனுக்கு ஒருநாள் இந்நாள் முப்பது சென்றால் ஒரு திங்கள்: இத்திங்கள் பன்னிரண்டு சென்றால் ஓர் ஆண்டு. இந்த ஆண்டு நூறு சென்றால் நான்முகனுக்கு வாணாள் முடிவு. இவ்வாறு முந்நூற்று அறுபது சென்றால் ஆதிநான்முகனுக்குப் பிரளய காலம் பிரளய காலம் நூறு சென்றால் திருமாலுக்கு ஒரு கற்பம் இந்தக் கற்பம் நூறு சென்றால் உரோமச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு மயிர் உதிரும். இந்த உரோமச மகா இருடிக்குப் பத்துக்கோடி மயிர் உதிர்ந்தால். மீனச மகா இருடிக்கு உடம்பிலே ஒரு செதிள் உதிரும். இவ்வாறு மீனச மகாஇருடிக்கு ஒரு கோடி செதிள் உதிர்ந்தால் பரத்துவாச மகாஇருடிக்கு ஒரு நிமிடம். இந்தப் பரத்துவாச மகாஇருடிக்கு இவ்வாறு முப்பது கோடி சென்றால் மகாசத்தி தலைமயிர் அவிழ்த்து முடிப்பாள். இவ்வாறு எழுநூற்று எண்பதுகோடி சத்திகள் தலைமயிர் அவிழ்த்து முடித்தால். இறைவனுக்கு அண்மையில் இருக்கின்ற உருத்திரமாகாளிக்கு ஒரு நிமிடம் என்று சொல்லப்பெறும்.

No comments: